தமிழ்நாடு

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
TN Weather Update
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

புயல் உருவாக வாய்ப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 27-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு உருவாகும் புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என பெயரிட தாய்லாந்து பரிந்துரைத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (அக்.24) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை - மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.