தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!
சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இதில், தனது செல்போன் காணாமல் போனதால் தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் இருந்து திருடியதாகக் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மோகன் என்பவர், லக்னோ செல்வதற்காகச் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடை அருகே அமர்ந்திருந்தபோது அயர்ந்து உறங்கியுள்ளார். பின்னர் விழித்துப் பார்த்தபோது, பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போனதால், உடனடியாக சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கிருஷ்ணன் மோகன் அருகே அமர்ந்திருந்த ஒரு நபர், தனது காலால் லாவகமாக அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த லக்ஷ்மண குமார் (மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்) என்பவரைக் கைது செய்தனர். கொல்கத்தா செல்லவிருந்த சமயத்தில், தனது செல்போன் காணாமல் போனதால், உடனடியாகத் தனக்கு செல்போன் தேவைப்பட்டதாலேயே தூங்கியவரிடம் திருடிச் சென்றதாக லக்ஷ்மண குமார் வாக்குமூலம் அளித்தார்.

இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுண்டர் அருகே உறங்கும் பயணிகளைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகச் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் (வயது 36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து திருடப்பட்ட 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.