தமிழ்நாடு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்
CBSE Class 10 Board Exams
CBSE கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வில் அடுத்தாண்டு (2026) முதல் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதற்கான காரணம் என்ன?
என்பதை இங்கு காண்போம்.

என்ன மாற்றம்?

புதிய கல்வி கொள்கையின் (NEP) பரிந்துரைகளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும், மே மாதம் மற்றொரு பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் நடைப்பெறும் தேர்வினை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக எழுத வேண்டும். மே மாதம் நடைப்பெறும் இரண்டாவது பொதுத்தேர்வினை மாணவர்கள் விரும்பினால் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஒரு மாணவர்/மாணவி இரண்டு பொதுத்தேர்வுகளையும் எழுதும் பட்சத்தில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ, அதுவே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும். இதில் உள்ள இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், முதல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்- இரண்டாவது பொதுத்தேர்வினை எழுத விரும்பினால், அவர்களால் எல்லா பாடங்களிலும் தேர்வு எழுத முடியாது. தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க அதிகப்பட்சமாக 3 பாடங்களில் மட்டுமே தேர்வு எழுத முடியும்.

மற்றபடி தேர்வு நடைப்பெறும் முறை, பாடப்பிரிவுகள், வினாத்தாள் அமைப்பு போன்றவற்றில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைப்பெறும் முதல் பொதுத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும், மே மாதம் நடைப்பெறும் இரண்டாம் பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த மாற்றம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுவதற்கான முக்கிய காரணம், பொதுத்தேர்வுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை குறைப்பதற்காகவும், மாணாக்கர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் தான் என மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுக்குறித்து கூறுகையில், “இந்த புதிய நடைமுறை பாரட்டத்தக்கது. பொதுத்தேர்வு தொடர்பான மாணவர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதோடு, கற்றலை கொண்டாட்டமான ஒன்றாக மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.



எச்சரிக்கும் கல்வியாளர்கள்:

ஒருபுறம் இந்த புதிய தேர்வு நடைமுறைக்கு ஆதரவுகள் பெருகினாலும், மறுப்புறம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு சார்பில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கை இது என கூறப்படும் வேளையில், மறைமுகமாக இது அழுத்தத்தை அதிகரிக்க தான் செய்யும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதற்கு காரணம், அதிக மதிப்பெண் எடுக்க இரண்டு வாய்ப்புகள் தரப்படுவதால் முதல் தேர்வினை நன்றாக எழுதிய பின்பும், அதிக மதிப்பெண்ணுக்காக இரண்டாவது தேர்வையும் எழுத மாணாக்கர்கள் நிர்பந்திக்கப்படலாம் என கவலை தெரிவித்துள்ளனர் கல்வியாளர்கள்.

இரண்டாம் பொதுத்தேர்வுகள் முடிவுகள் ஜூன் மாதம் தான் வெளியாகும் என்பதால் இது இடைநிற்றலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.