தமிழ்நாடு

கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்.. சென்னை அருகே பரபரப்பு!

சென்னை எண்ணூர் கடற்கரைப் பகுதியில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்.. சென்னை அருகே பரபரப்பு!
Bodies of women washed ashore
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைப் பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்கள் தகவல்: போலீசார் மீட்பு

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரைப் பகுதியில் இன்று நான்கு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியதை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் பார்த்து உடனடியாக எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த முதற்கட்ட விவரம்

இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நான்கு பெண்களும் சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் தேவகி செல்வம் என்பவர் இலங்கை அகதிகள் முகாமைச் சார்ந்தவர் என்றும், ஷாலினி என்ற மாணவி கல்லூரி மாணவி என்றும் தெரியவந்துள்ளது. மற்ற இரண்டு பெண்களின் பெயர்கள் பவானி மற்றும் காயத்ரி என்று போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழப்பிற்கான காரணம் என்ன?

எண்ணூர் கடற்கரைப் பகுதியில் இவர்கள் கடலில் குளிக்க வந்தபோது, கல்லூரி மாணவி அலையில் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற மற்ற மூவரும் முற்பட்டபோது, அவர்களும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.