அரசியல்

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கே பாதுகாப்பில்லை.. இபிஎஸ் குற்றசாட்டு
Edappadi palanisamy
மதுரை, திருமங்கலம் அடுத்த வே.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் முகமூடி அணிந்தபடி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, தலைமை காவலர் பால்பாண்டியையும் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சரே?

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. V. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன். மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு" என்று தெரிவித்துள்ளார்.