அரசியல்

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்
Tamil Nadu sets out to defeat DMK - Tamilisai Soundararajan
தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு எதிராகவும், திமுக கூட்டணியை தோற்கடிக்கவும் தமிழ்நாடு மக்கள் பேரணியாக புறப்பட உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நாளும் இந்திமொழித் திணிப்பு, கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு, தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு, நீட் எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு, இப்படி தமிழர்களைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் தமிழினப் பகைவர்களுக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் எதிராக ஓரணியில் தமிழ்நாடு.

ஜூலை 1 முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஓரணியில் தமிழ்நாடு என்னும் முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிடக் திமுகவினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினேன்.

இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி அல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சரின் இந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நாளும் இந்து மக்கள் மீது வெறுப்பு, கீழடியில் உண்மையான சான்று கொடுக்க மறுப்பு, தமிழ்நாட்டின் நியாய விலை கடைகளில் இல்லை பருப்பு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு இல்லை பாதுகாப்பு, நீட் விலக்கு என் முதல் கையெழுத்து என்று பொய்யுரைப்பு, தொகுதி மறுசீரமைப்பு பற்றி பொய்யான செய்திகளை பரப்பு..

இப்படி வாக்களித்த தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக பேரணியாக திரளப் போகும் தமிழ்நாடு.. திமுக கூட்டணியை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. இது வெறும் பதிவு அல்ல.. தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் சொல் ஆயுதம்.. வேல் ஆயுதமும் கூட..” என்று அவர் தெரிவித்துள்ளார்.