அரசியல்

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசன் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்
கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “இஸ்லாமிய தீவிரமாக இருந்தாலும் சரி, எந்த தீவிரவாதமாக இருந்தாலும் சரி இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கும் அது உதவும்.

தமிழக ஆளுநர் நேர்மையானவர்

மத்திய அரசு எவ்வளவு தந்து கொண்டிருக்கின்றது. அதைப்போற்றுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை. தமிழகம் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும், தமிழகத்தின் ஆளுநரை பொறுத்தவரையில் மிக, மிக நேர்மையானவர். அவர் தன் கடமையை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஒத்துழைப்பை மாநில அரசு நல்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

நாடெங்கும் இன்றைக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை அதற்காக தந்து கொண்டிருக்கின்றது. அதுபோன்ற நேரங்களில் சில முடிவுகள் தவிர்க்க இயலாததாக தான் நினைக்கின்றேன்.

கஞ்சாவை ஒழிக்க வேண்டும்

டாஸ்மாக் பிரச்னை அதிகமாக இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதைவிட கஞ்சா அதிகமாகி பரவிக்கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரையில் இரு வேறு தீர்ப்புகளை தந்து கொண்டிருக்கின்றது. கேரளாவை பொறுத்தவரையில் ஆளுநருக்கு மட்டும் தான் துணைவேந்தர்களை அனுமதிக்கும் அல்லது நியமிக்கின்ற முழுமையான அதிகாரம் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு அது மாறாக தீர்ப்பு வந்திருக்கின்றது. இது சட்ட வல்லுநர்களைக் கொண்டுதான் முறையாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நாட்டின் ஒற்றுமை முக்கியம்

ஒன்றிப்போய் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், நான் ஒத்துழைத்து என்று சொல்கிறேன். ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும், ஒன்றிய அரசு என்று சொன்னால் மாநிலத்தில் இருக்கின்றது என்ன பஞ்சாயத்து அரசா...? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள்.

அப்படி யாரும் சொல்லவில்லையே உங்களுடைய எண்ணம் தவறாக இருக்கின்ற காரணத்தினால் தான் இதுவரை இல்லாத மொழிபெயர்ப்பை ஏன் தருகிறீர்கள். இந்த அரசு இப்போது வந்த பிறகுதான் இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் வருகின்றது. உங்களைவிட நாடு முக்கியம் இந்த நாட்டின் ஐக்கியம் முக்கியம். இந்த நாட்டின் ஒற்றுமை முக்கியம்.

சமஸ்கிருந்தத்தில் இருந்து தமிழ்...

கமலை பற்றி ஒரு ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, கமலஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக சொல்லி இருக்கின்றாரா...? திமுகவை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு திமுகவோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை என்று சொல்லுகிறார். இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கின்றவரை பற்றி என்னிடத்தில் எதற்கு கருத்து கேட்கிறீர்கள், பதவிக்காக அவர் அப்படி பேசி இருக்கிறார். இங்கே தீப்பற்றி எறிந்தாலும், அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை.

தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக அவர் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்துள்ளது என்று யாராவது ஒருவர் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா...? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா அதுபோலத்தான் நாம் பேசுகின்றபோது அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் அவர்கள் தான் பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு தகுதி படைத்தவர்கள் என கமலை சாடினார். மேலும், முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு பாதுகாப்பு தருவது மாநில அரசின் கடமை என தெரிவித்தார்.