அரசியல்

MLA பதவி ராஜினாமாவா? பாமக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு

பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MLA பதவி ராஜினாமாவா? பாமக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு
Salem West PMK MLA Arul decided to Resign
கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என நேற்றைய தினம் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்தது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”அன்புமணி-செளமியா இரண்டு பேரும் கால்களை பிடிச்சு அழுவுறாங்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று. இதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி குறிப்பிட்டார். எனக்குத் தெரியாமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்க சௌமியா அனைத்து வேலைகளையும் செய்துவிட்டார். ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 3 இடங்களாவது எங்களுக்கு கிடைச்சிருக்கும். அதிமுகவும் 6-7 இடங்கள் கூடுதலாக ஜெயிச்சிருக்கும். எங்களது சின்னமும் பறிப்போயிருக்காது. அன்புமணி பொய்களை கூசாமல் பேசுவார்” என அடுக்கடுக்காக நேற்றைய தினம் அன்புமணி ராமதாஸ் மீது பாமக நிறுவனர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ராஜினாமா செய்கிறாரா அருள்?

பாமகவில் கிட்டத்தட்ட விரிசல் உறுதியாகியுள்ள நிலையில், இன்றைய தினம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்து வருகின்றார். சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாகவும், அவர்தான் இறுதி முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். நேற்றைய தினம், அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மன உளைச்சலில் இருக்கேன்: ஜி.கே.மணி பேட்டி

தைலாபுரத்திற்கு வருகை தந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பத்திரிக்கையாளர்களே சந்தித்த போது, “என்ன சொல்றதுனே எனக்கு தெரியல. கடுமையான மன உளைச்சலில் இருக்கேன். ஒரு பலமான கட்சி, கொள்கையோடும், லட்சத்தியோடும் இருக்கிற கட்சி. உங்களிடம் எதுவும் சொல்லாமல் ஓடியிருப்பேன். ஓடுனால் அதை வேறுமாதிரி சொல்லுவீங்க. இப்ப பாமகவிற்குள் ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மனசுக்கு கஷ்டமாகவும்,வேதனையாகவும் இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக மீண்டும் வலிமையா வரணும். என் கட்சிக்குள் ஏற்பட்டியிருக்கிற நெருக்கடி, இந்த நேரத்தில் நான் எதுவும் சொல்வது நல்லதாக இருக்காது” என பேட்டியளித்துள்ளார்.

பா.ம.க.வில் முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, கட்சியில் அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது. கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில் தற்போது அப்பா-மகன் இடையேயான மோதல் போக்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.