பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை நியமித்தார். அதற்கு மேடையிலையே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அன்றிலிருந்து தந்தை மகன் இடையே பிரச்னை நிலவி வருகிறது.
ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு
அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் நீக்கினார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் தானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி அறிவித்தார். இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மாநாட்டு மேடையிலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெளிப்படையாக தெரிந்தது. மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக நிர்வாகிகளை ராமதாஸ் பாராட்டினார். ஆனால் அன்புமணி பெயரை குறிப்பிடாததால் மோதல் இன்னும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.ஆனால் சொற்ப மாவட்ட செயலாளர்களே ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்ததால் ராமதாஸ் அதிருப்தி அடைந்தார். இதனால் கோபமான ராமதாஸ், மாவட்டச் செயலாளர்களை அன்புமணி தடுத்ததாக கூறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் இளம் வயதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை அன்புமணிக்கு கொடுத்து தவறு செய்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன் என தெரிவித்தார்.
வழக்கறிஞர் கே.பாலு நீக்கம்
மேலும், கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும், செளமியாவும் தான் வற்புறுத்தியதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என தான் கூறியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். இந்த நிலையில் அன்புமணி ஆதரவாக உள்ள பாமகவின் பொருளாளராக உள்ள திலகபாமாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் சையது மன்சூரை நியமனம் செய்தார். தங்கள் கட்சியின் கொள்கைப்படி சிறுபான்மை சமூகத்திற்கு தான் பொருளாளர் பதவி கொடுக்க வேண்டும் என ராமதா விளக்கம் அளித்தார். ஆனால் பாமக பொருளாளராக திலகபாமாவே தொடர்வார் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ பாமக சமூக நீதிப் பேரவைத் தலைவராக இருந்த வழக்கறிஞர் கே.பாலு அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.அவருக்கு பதிலாக வழக்கறிஞர் வி.எஸ்.கோபு சமூக நீதிப் பேரவைத் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.