உலகம்

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?
Reporter hit by rubber bullet in Los angeles
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்ற போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை ரப்பர் தோட்டாவால் அங்கிருந்த நபர் சுட்டது தொடர்பான காணொளி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறை வெடித்தது எதனால்?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிபராக பொறுப்பேற்றது முதலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் டொனால்டு டிரம்ப். இந்நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் தேதி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை சிறைப்பிடிக்க தீவிரமான சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் நிறைவில் சுமார் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்கா அரசின் இந்த நடவடிக்கையினை கண்டித்து ஒரு குழுவினர் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் போராட்டக்குழுவினர் மற்றும் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தை கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் கட்டுப்படுத்த தவறிவிட்டனர் என தேசிய ராணுவத்தை களமிறக்கினார் அதிபர் டொனால்டு டிரம்ப். இதனால், போராட்ட களம் பதற்றமடைந்தது. இந்த போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரை ரப்பர் தோட்டாவால் தாக்கிய சம்பவம், பத்திரிக்கை சுதந்திரத்தை அமெரிக்க அரசு கேள்விக்குள்ளாக்குவதாக விவாதங்கள் கிளம்பியுள்ளது.

தி இன்டிபெண்டண்ட் கூற்றுப்படி, 9நியூஸ் தொலைக்காட்சியின் நிருபரான லாரன் டோமாசி லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள Metropolitan Detention Centre- க்கு வெளியே நடைப்பெற்று வந்த போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்றிருந்தார். போராட்டத்தினை கலைக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வருகை தந்தனர். நேரலையில் செய்தியினை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் நிருபர் லாரன் டோமாசி. அப்போது எதிர்ப்பாராத வண்ணம், அவரது கால்களை குறிபார்த்து ரப்பர் தோட்டாவால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

ரப்பர் தோட்டாவினால் சுட்டது, LAPD-யா? அல்லது போராட்டங்களை எதிர்ப்பதில் ஈடுபட்டுள்ள வேறு நிறுவனமா? என்கிற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. இதுக்குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டா தாக்கிய போது, வலியில் துடித்து அலறினார் லாரன் டோமாசி. இருப்பினும், அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதுத்தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், “தானும் தனது கேமராமேன் ஜிம்மியும் பாதுகாப்பாக இருக்கிறோம். அசாதாரணமான போராட்டங்களை படம் பிடிக்கும் தருணத்தில் சில நேரங்களில் இது போன்ற ஆபத்து ஏற்படும். போரட்டத்தின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே மிகவும் பதட்டமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் லாரன் டோமாசி.

கலிபோர்னியா ஆளுநரின் வேண்டுக்கோள்:

மூன்று நாட்களுக்கு மேலாக நடைப்பெற்று வரும் போராட்டத்தினால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அமெரிக்க அதிபர் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், “ ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக திகழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் தற்போது சட்டவிரோத ஏலியன்ஸ் மற்றும் குற்றவாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம், தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற உத்தரவிடுமாறு அதிபர் ட்ரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். டிரம்பின் நடவடிக்கையானது மாகாணங்களின் மீதான உரிமை மீறல் செயலாகும் எனவும் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.