அரசியல்

அதிமுக ஒன்றிணையும் விவகாரம்.. புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்- செங்கோட்டையன்

"அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 அதிமுக ஒன்றிணையும் விவகாரம்.. புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்- செங்கோட்டையன்
Sengottaiyan
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

'அதிமுக ஒன்றிணைவதே நோக்கம்'

செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் மனம் திறந்து பேசினேன். தொண்டர்கள், மக்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எனது கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

'மறப்போம், மன்னிப்போம்'

"அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கட்டிக் காத்தார். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு' என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். எனவே, மறப்போம், மன்னிப்போம். அதிமுக ஒன்றிணையும் விவகாரம் குறித்துப் புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2026-ல் அதிமுக ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.