அரசியல்

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!

அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுகவினர் நேரில் அஞ்சலி!
அஇஅதிமுக சார்பில் 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் S.கோகுல இந்திரா. மறைந்த முன்னாள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் கோகுல இந்திரா. அதன்பின் நடைப்பெற்ற 2016- ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தப்போதும், கோகுல இந்திரா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியுற்றார்.

தற்போது அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளராகவும், கழக செய்தித் தொடர்புச் செயலாளர் பொறுப்பினையும் வகித்து வருகிறார் S.கோகுல இந்திரா. இவரது கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார்.இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் கட்சி பிரதிநிதிகள் பலரும் A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “கழக முன்னாள் அமைச்சர் திருமதி.S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் சந்திரசேகர் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது கணவரை இழந்து வாடும் திருமதி.கோகுல இந்திரா அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.