அரசியல்

எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டிருக்கிறார்...அமைச்சர் ரகுபதி சாடல்

திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.

 எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டிருக்கிறார்...அமைச்சர் ரகுபதி சாடல்
அமைச்சர் ரகுபதி மற்றும் எடப்பாடி பழனிசாமி
திமுக உறுதுணையாக இருக்கும்

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். இன்று நடைபெற்ற புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். தொடர்ந்து 7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும். தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். மீண்டும் 2026-ல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.

எங்கள் வெற்றி தொடரும், எங்களது சாதனைகள் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி கொடுத்தது பற்றிய கேள்விக்கு, இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எங்கள் திராவிட மாடல் ஆட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

ஆதீனத்திற்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை

மதுரை ஆதீனம் கார் விபத்து பற்றிய கேள்விக்கு, மதுரை ஆதீனம் மீது மத அடையாளம் வைத்து தாக்குதல் நடத்த அவசியம் இல்லை. அவர் சாலை விதிகளை மதிக்காமல் சென்றதால் இந்த கார் விபத்து ஏற்பட்டது. அதைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை.மதுரை ஆதீனம் மீது தாக்குதல் நடத்தி யார் எந்த பலனடைய போகிறார் என தெரியவில்லை. ஒருவேளை பாரதிய ஜனதா கட்சியின் ஆதாயத்திற்காக அவர் இதுபோன்ற புகார் கொடுத்திருக்கலாம்.

எங்களைப் பொறுத்தவரையில் திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது. ஆதினம் மீது யாரும் புகார் கொடுத்தாலும், அந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து தான் வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம், தவிர பொய் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் எந்த ஒரு வழக்கும் பதிய மாட்டோம்.

பெண்கள் பாதுகாப்பு

திமுக ஆட்சியில் மக்கள் வேதனையுடன் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி அமைச்சர் ரகுபதி இடம் கேட்டபோது, அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் வேதனையாக இருக்கும். வேறு யாருக்கும் வேதனை இருக்காது. மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சி கொடுத்திருக்கும் பாதுகாப்பு போல் யாரும் கொடுத்திருக்க முடியாது. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு மக்களுக்கு கொடுத்திருக்க முடியாது.

தமிழகத்தில் உயர் கல்வியிலே 74 சதவீதம் பெண்கள் முன்னேறி வந்துள்ளனர். தமிழகப் பெண்கள் 52% வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளனர். பெண்களுக்கு கல்வி முன்னேற்றத்தில் வாய்ப்பு கொடுத்து அவர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புக்கு செல்வதிலிருந்து இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு அதிக அளவில் கொடுக்கும் மாநிலம் தமிழகம் தான்.

இபிஎஸ் தூங்கிக்கொண்டிருக்கிறார்

தமிழ்நாட்டிலே பெண்களுக்கு எவ்வளவு உயரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் தெரியும். இது அனைவருக்கும் தெரியும். தூங்கிக்கொண்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு இது தெரியாது. அவரை தட்டி எழுப்பி சொல்ல வேண்டும். மேலும் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, விஜயின் அரசியல் செல்வாக்கு பற்றி எங்களுக்கு கவலை இல்லை என கூறினார்.