அரசியல்

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில் தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார். மேலும், இந்த சின்னத்தை அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

தேர்தல் விதிகளுக்கு முரணானதா?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும் வாதிட்டார். ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய போது, தவெக கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி சக்திவேல் வழக்கினை தள்ளி வைத்தார்.

Read more:குடும்ப கட்சியாகிய திமுக.. முதல்வரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி