அரசியல்

5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. ஷாக் கொடுத்த காங்கிரஸ்

குஜராத், பஞ்சாப், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. ஷாக் கொடுத்த காங்கிரஸ்
Byelection Results Today
குஜராத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளான விசாவதர் மற்றும் காடி, பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மேற்கு தொகுதி, கேரளா மாநிலத்தில் நிலம்பூர் தொகுதி மற்றும் மேற்குவங்காளத்தில் காளிகஞ்ச் தொகுதி என மொத்தம் 4 மாநிலங்களிலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைப்பெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் முறையே தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றன.

ஆம் ஆத்மி 2 இடங்களில் முன்னிலை:

குஜராத்தின் காடி தொகுதியில் பாஜகவும், குஜரத்தின் விசாவதர் மற்றும் பஞ்சாப்பின் லூதியானா மேற்கில் ஆம் ஆத்மி கட்சியும் முன்னிலை வகிக்கின்றனர். கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்காளத்திலுள்ள காளிகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன.

நடைப்பெற்று வரும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், கேரள மாநிலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், நிலாம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக பதவியில் இருந்தவர் பி.வி.அன்வர். சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கிய பி.வி.அன்வர், கேரள மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணியின் ஆதரவுடன் அத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் பி.வி.அன்வருக்கு ஆளும் இடதுசாரி கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனது பதவியினை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் பி.வி.அன்வர் கேரள மாநில திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இதனால் தான் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், பாஜக வேட்பாளர், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பி.வி.அன்வரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

கேரளாவில் ஆளும் அரசு வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவு:

நிலாம்பூர் சட்டமன்ற தொகுதியானது, பிரியங்கா காந்தி வெற்றி பெற்ற வயநாடு மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரியங்கா காந்தியும் சாலை வழி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆம் ஆத்மி தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். 2 இடங்களில் தற்போது முன்னிலையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளும் கொஞ்சம் உற்சாகமடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.