அரசியல்

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்

விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விஜய் இனிமேல் பதில் சொல்வார்.. கூட்டணி குறித்து நயினார் சூசகம்
bjp state president nainar nagendran pressmeet
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகளும், அதிமுக புரட்சி தலைவி அம்மா பேரவையின் மாநில துணை செயலாளர் ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகை உடல்நிலைக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் கருணாம்பிகையின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பகுதிக்கு வருகை தந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மறைந்த கருணாம்பிகையின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து தனது ஆறுதல் தெரிவித்ததோடு, கருணாம்பிகையின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் மகள் நோய் தொற்றால் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

வருகிற ஜூன் 7 ஆம் தேதி இரவு மதுரை வரும் உள்துறை அமித்ஷா 8 ஆம் தேதி, பாஜக அனைத்து பொறுப்பாளர்களையும் நேரில் சந்தித்து கலந்தாலோசிப்பதாக தெரிவித்த நயினார் நகேந்திரன் , திமுகவின் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமென்றால் எல்லோரும் ஒரணியில் திரள வேண்டும் எனவும் தெரிவித்தார்.விஜய் கூட்டணியில் இணைய வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தேன், அதற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன் என்றார்.

கமல் குறித்து நயினார் கருத்து:

தொடர்ந்து பேசுகையில், ”இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. பல்வேறு மொழிகள் பேசக்கூடியவர்கள் உள்ள நிலையில், அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழி பெரியது. கமல் தாய்மொழியை உயர்த்தி பேசியது வரவேற்றக்தக்கது. அதே நேரத்தில் இன்னொரு மொழியோடு ஒப்பிட்டு பேசியது பொருந்ததாது” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ஞானசேகரன் வழக்கை விட விரைந்து முடிக்க ஏராளமான வழக்குகள் உள்ளது என குறிப்பிட்ட நயினார் நகேந்திரன், காவல்துறை தமிழ்நாட்டில் சரியாக இயங்கவில்லை, அவர்களது புலன்விசாரணை சரியானதாக இல்லை எனவும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரால் சரியாக இயங்க முடியவில்லையா? என கேள்வியும் எழுப்பினார். கஞ்சா புழக்கம், கொலை போன்றவை அதிகரித்துள்ளது காவல்துறையின் திறமையின்மை சான்றாகும் எனவும் பெருந்துறை சிப்காட் பகுதி மக்களுக்கு உரிய தீர்வு வேண்டி கருப்புகொடி போராட்டம் நடைபெறும் எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுத்துள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக,அதிமுக ஏற்கெனவே தங்களது கூட்டணியினை உறுதி செய்துள்ள நிலையில் பாமக, தவெக-வினை ஒரே அணியில் திரட்ட பல்வேறு அரசியல் நகர்வுகள் நடந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது.