அரசியல்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி–அமித்ஷா அறிவிப்பு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி–அமித்ஷா அறிவிப்பு
அதிமுக தலைமையில் கூட்டணி

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ் மக்களுக்கு பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா இருந்த காலம் முதலே அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது. தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம். 1998 முதல் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. பாஜக –அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றிய காலம் உண்டு. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது. எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி அமையப்போகிறது.

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி

அதிமுக தரப்பில் இருந்து ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார். வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு, வென்ற பின்னர் பதில் சொல்கிறோம் என அமித்ஷா பதில் அளித்தார். மேலும், அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விவகாரங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம். ஓபிஎஸ், சசிகலா விவகாரம் அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம் ஆகையால், அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சனாதனம், தொகுதி மறுவரையறை கொள்கை போன்ற பல்வேறு பிரச்சனைகளை திமுக எழுப்பிக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஊழல்களை மறைக்க இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகின்றன. திமுகவின் எந்தவிதமான குழப்பத்திற்கு ஆளாக விரும்பவில்லை. எடப்பாடியின் சீறிய தலைமையில் தான் கூட்டணி அமைக்கும்.அதிமுக எந்தவிதமான நிபந்தனையும் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்த கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் தலையிட மாட்டோம். தேர்தல் விஷயத்தில் எடப்பாடி தலைமையில் தான் முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் பலனளிக்கக் கூடியது என தெரிவித்தார்.