அரசியல்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்
P. Shanmugam
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “தமிழக அரசு 50 ஆரம்பர சுகாதர நிலையங்களில் டயாலிஸிச் சிகிச்சை அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் எதிர்க்கிறோம். அந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசே அந்த சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

சமமான நிதி பங்கீடு வேண்டும்:

மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களுக்குநிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை மக்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மொழி அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திமுக தரப்பிலிருந்து அழுத்தம் இல்லை:

திமுக கூட்டணியில் பிளவு வராதா, திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறி அதிமுக உடன் இணையாதா என எதிர்ப்பார்ப்புடன் பலர் இருந்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என அதிமுக கூறுவது, அந்த ஏமாற்றத்தின் விளைவாக வரும் கருத்து.

அனைத்து கட்சிகளும் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என தான் விரும்புவார்கள். நாங்கள அதை விரும்புகிறோம். அதை தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது முடிவெடுப்போம். அதிக தொகுதி கேட்போம் என கூறியதால் திமுக தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. எத்தனை தொகுதி கேட்பது குறித்து எங்கள் கட்சி தான் முடிவெடுக்கும்.

அதிமுகவுக்கு இந்த நிலைய வந்துவிடக் கூடாது:

பாஜக கூட்டணியில் அதிமுக மட்டும் தான் உள்ளது. மற்றவை எல்லாம் சிறு சிறு குழுக்கள் தான். அந்த கூட்டணியிலிருந்து கட்சிகளை பிரிக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக தான் உள்ளது வேறு கூட்டணியில் இருந்து கட்சிகளைப் பிரித்து எங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியா முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக தன் ஆக்டோபஸ் கரங்களால் அழித்துவிட்டது. அந்த நிலை அதிமுகவுக்கு வந்துவிடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதிமுக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து அழிந்து விடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு உள்ளது.
இதுகுறித்த எச்சரிக்கையை தான் நாங்கள் திரும்ப திரும்ப கூறி வருகிறோம்.

ரெய்டுக்கு பயந்து கூட்டணி:

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும். இந்த கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததுக்கு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் அல்ல. ரெய்டுக்கு பயந்து தான் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.