இந்தியா

உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: அடித்துச்செல்லப்பட்ட கிராமம்..பலர் மாயம்

உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: அடித்துச்செல்லப்பட்ட கிராமம்..பலர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாஷியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமம் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி
உத்தராண்ட் மாநிலம், உத்தரகாஷியில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 50 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராமம்

உத்தரகாஷியில் உள்ள தாரளி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பலத்த நீர் ஓடை பாய்ந்து பல வீடுகளை அடித்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும், ஏராளமானோர் சிக்கி இருக்கலாமென அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகளில் நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். மேலும், தாராளி (உத்தரகாஷி) பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தீவிரம்

மேலும் SDRF, NDRF, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற தொடர்புடைய குழுக்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது சம்பந்தமாக, நான் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்பிற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தப் பருவத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஹரித்வாரில் கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை மழை தொடர்பான சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மலைச்சரிவிலிருந்து விழுந்த பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளன.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

உதம் சிங் நகர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் லெவ்டா நதி மற்றும் அதிலிருந்து உருவாகும் ஓடைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ராம்பூர்-நைனிடால் பிரதான சாலை, சக்கர்பூர், லகான்பூர், முரியா பிஸ்டர் மற்றும் பர்ஹைனி கிராமங்களில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று மலைப்பாங்கான பகுதிகளில் மிக அதிக மழை பெய்யும் என 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்யும் என 'ஆரஞ்சு' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் ஈடுபட ஏராளமானோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.