சினிமா

என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்: விஜய் சேதுபதி

“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்: விஜய் சேதுபதி
phoenix trailer launch - Vijay Sethupathi
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை 4 ஆம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசுக்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு கதையை சொன்னார். ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

என் பையனின் முடிவுகளை அவன்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார், அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து, சூர்யா சேதுபதி பேசும்போது, "கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும், நண்பர்களும், பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. நான் சோர்வாக இருக்கும் போது எனக்கு உத்வேகம் அளித்து இந்த படத்தில் நடித்த அனைவரும் உதவினார்கள். நடிகை தேவதர்ஷினி படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். இயக்குனர் அனல் அரசு நிறைய சொல்லிக் கொடுத்தார். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் அனல் அரசு, "இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்த படமே இல்லை. இந்த படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யாவை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதியிடம் சொன்னேன்.

ஒன்றரை வருடமாக சூர்யா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யாவுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் கடமையாக உழைத்துள்ளனர். சண்டை பயிற்சி இயக்குநராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குநராக என்னுடைய முதல் படம் இது. அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்" என்றார்.