அரசியல்

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!
jagadeeswari
தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கும் ஜெகதீஸ்வரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், அவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

அவரது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், அவரது தொகுதியான ராஜபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவர் மீது புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தவெகவைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கும் ஜெகதீஸ்வரியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தனது அமைச்சர் பதவியை அவர் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி கட்சித் தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், அவரது அமைச்சர் பதவியைப் பறிப்பது குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சந்திப்பு அருகே நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் மாருதி எர்டிகா கார், இருசக்கர வாகனத்தில் சென்ற இறையன்பு (26) என்பவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து நடந்த காரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி இல்லை என்றும், அவர் முன்னதாக அரசு வாகனத்தில் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னால் வந்த அவரது சொந்தப் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில் உறவினர்கள் மற்றும் தனிப்பட்ட பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த காரை ஓட்டிய சின்ன அக்னி என்பவர் முதலில் தனியார் ஓட்டுநர் என கருதப்பட்ட நிலையில், அவர் காவல்துறையின் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவர் அமைச்சரின் வீட்டுப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட காவலர் தனிப்பட்ட காரை ஓட்டியது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.

சொந்த ஊரில் கிணறு விவகாரம்

இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள பனைவிளை கிராமத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு எதிராக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பொது கிணறு தொடர்பாக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொது பயன்பாட்டில் இருந்த கிணற்றை அமைச்சர் தரப்பு ஆக்கிரமித்துள்ளதாக புகார் கூறப்படும் நிலையில், அமைச்சர் தரப்பில் அந்த கிணறு அவரது மூதாதையர்களால் ஊருக்கு தானமாக வழங்கப்பட்டதாகவும், தற்போது அதற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்வி தகுதி குறித்து கேள்விகள்

அமைச்சர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2018ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றதாகவும், தொழிலாக ‘News Editor’ எனவும் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சமூக வலைதளங்களில் அமைச்சர் தனது பெயருக்கு முன்னால் ‘Dr.’ என பயன்படுத்தியிருப்பது தொடர்பாகவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ‘Dr.’ என்ற பட்டத்தை அவர் எந்த கல்வித் தகுதியின் அடிப்படையில் பயன்படுத்துகிறார் என்பது குறித்து தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.

மிரட்டல் ஆடியோ முதல் புதிய சர்ச்சைகள் வரை

இதற்கு முன்பும் அமைச்சர் ஜெகதீஸ்வரியை தொடர்புபடுத்தி மிரட்டல் ஆடியோ உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பிட்ட ஆடியோ தொடர்பாக, தன்னை தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தேவையானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களில் பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை என்றும், உண்மையை அறியாமல் யாரும் அவற்றை பகிர வேண்டாம் என்றும் அமைச்சர் ஏற்கெனவே கூறியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி நீக்கமா?

இந்நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு எதிராக சொந்தக் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதாகவும், நிர்வாகத் திறன் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. அவருக்கு பதிலாக சத்தியபாமா அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருபுறம் விபத்து வழக்கு, மறுபுறம் சொந்த ஊர் புகார், கல்வித் தகுதி தொடர்பான கேள்விகள், சமூக வலைதள சர்ச்சைகள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து விவகாரங்கள் எழுந்துள்ள நிலையில், அரசு மற்றும் கட்சித் தலைமை தரப்பில் இருந்து வெளியாகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.