பந்தை விளாசிய சென்னை அணி.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.

18-வது ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி மே 25-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் திலக் வர்மா 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து மும்பை அணி, சென்னை அணிக்கு 156 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா – ராகுல் திரிபாதி களமிறங்கினர். இதில் ராகுல் திரிபாதி 2 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், மும்பை அணியின் பந்து வீச்சை அட்டகாசமாக எதிர்கொண்டு அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சிவம் துபே 9 ரன்களிலும், தீபக் ஹூடா 3 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
What's Your Reaction?






