உலகம்

அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?

100 நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது என்ன கிளஸ்டர் குண்டு? 100 நாடுகளில் தடை செய்தது எதற்காக?
Iran Attacks Israel with Cluster Munitions
பாலஸ்தீனத்தின் காஸாவில் செயல்பட்டு வந்த ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதிக்கள் போன்ற அமைப்புகளை காலி செய்த இஸ்ரேல் ராணுவம் தற்போது ஈரான் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேலின் 200 விமானப் படை விமானங்கள் திடீரென ஈரானுக்குள் ஊடுருவி சுமார் 100 இடங்களில் குண்டு போட்டன.

குறிப்பாக ராணுவ தலைமையகம், ராணுவத் தளபதிகள் குவார்ட்டர்ஸ், அணு ஆயுத தயாரிப்பு மையங்கள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் தொடுத்ததில் ஈரான் படைத்தளபதி கோலான் அலி, பாகெரி, ஹுசேன் சலோமி உள்ளிட்ட 10 பேரும், முகமது மெதி தெஹ்ராஞ்சி, ஃபெரேடவுன் அப்பாசி உள்ளிட்ட 14 விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஈரானும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று, இஸ்ரேல் மீது தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிபொருட்களுடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரான் நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கில் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது.

கிளஸ்டர் குண்டு என்றால் என்ன?

கிளஸ்டர் குண்டு என்பவை, மற்ற வகை வெடிகுண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஆபத்தானவை. மற்ற வகை வெடிகுண்டுகள் ஒருமுறை ஏவப்பட்டவுடன், இலக்கை நோக்கி சென்று மொத்தமாக வெடித்துவிடும். ஆனால், கிளஸ்டர் குண்டுகள் ஒரேயடியாக வெடிக்காது. மாறாக நடுவானில் குண்டு பிளந்து அதிலிருந்து பல சிறிய வெடிபொருட்கள் சிதறும்.

பெரிய பரப்பளவில் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளைச் சிதறடிக்கும் போது, அவை தரையிறங்கும் சமயத்தில் வெடிக்க தவறினாலும் கூட அவை தொடர்ந்து செயலிலேயே இருக்கும். இதனை அறியாமல், அதற்கு அருகிலோ அல்லது அதனை தொடும்பட்சத்தில் பெரும் ஆபத்து பொதுமக்களுக்கு ஏற்படும். இத்தகைய அபாயங்கள் காரணமாகவே, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஆயுதங்களின் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.



தாக்குதலை உறுதிப்படுத்திய IDF:

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த கிளஸ்டர் வெடிபொருட்களுடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையானது 7 கிலோ மீட்டர் உயரத்தில் பிளந்து, 8 கிலோ மீட்டர் சுற்றளவில் 20 துணை வெடிபொருட்கள் (sub-munitions) பரவி விழுந்ததாக IDF குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த இருதரப்பு நாடுகள் இடையேயான மோதலில், ஈரான் கிளஸ்டர் வெடிபொருட்களைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகள் கண்டனம்:

கிளஸ்டர் வெடிப்பொருட்களினை பயன்படுத்தியதற்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, நகர்ப்புற குடியிருப்புகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதற்கும், வெடிக்காமல் கிடக்கும் குண்டுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மனித உரிமை அமைப்புகள் தங்களது கவலையினை பதிவு செய்துள்ளன.

கிளஸ்டர் வெடிபொருட்கள் தொடர்பான மாநாடு (Convention on Cluster Munitions) கடந்த 2008-ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் கிளஸ்டர் வெடிப்பொருட்கள் ஆயுதங்களின் பயன்பாடு, உற்பத்தி, கையிருப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றைத் தடை செய்வதே ஆகும். 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இந்த மாநாட்டில் கையெழுத்திடவில்லை. இதேபோல், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளும் இதில் கையெழுத்திடாத பட்டியலில் உள்ளன.

2023 ஆம் ஆண்டில், பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான பாதுகாப்பிற்கு உதவுவதற்காக அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிமருந்துகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.