உலகம்

வங்கதேச கரன்சியில் அதிரடி மாற்றம்: முஜிபுர் ரகுமானுக்குப் பதிலாக கோயில்கள்!

முஜிபுர் ரகுமான் தொடர்பான பாரம்பரிய அடையாளங்களை சிதைக்கும் வகையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் வங்காளதேச கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

வங்கதேச கரன்சியில் அதிரடி மாற்றம்: முஜிபுர் ரகுமானுக்குப் பதிலாக கோயில்கள்!
Bangladesh Currency Reshaped by interim govt
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நாளுக்கு நாள் ஏதோ ஒரு பஞ்சாயத்து புதியதாக முளைத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்ட நாணய நோட்டுகளில் (தகா) வங்காளதேசத்தின் தந்தை என போற்றப்பட்ட முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாம் காந்தியை எப்படி கொண்டாடுகிறமோ, அப்படி வங்காளதேசத்தில் ஒருக்காலத்தில் கொண்டாடப்பட்டவர் முஜிபுர் ரகுமான். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் சுதந்திரம் பெற போரட்ட குழுவினை வழிநடத்தியவர்களில் முதன்மையானவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். வங்காளதேசம் என்கிற நாடு உருவான போது ஜனாதிபதியாக பதவியேற்ற முஜிபுர் ரஹ்மான் 1975 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தின் போது குடும்பத்தினருடன் படுகொலை செய்யப்பட்டார். வங்காளதேசத்தின் தேசப்பிதாவாக கருதப்பட்ட முஜிபுர் ரஹ்மானின் உருவம் தான் அந்நாட்டின் நாணய தாள்களில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஷேக் முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் இடம்பெற்ற நாணயத் தாள்களுக்குப் பதிலாக, புதிய வடிவமைப்புகள் அடங்கிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. புதியதாக வெளியிடப்பட்டுள்ள 1000 தகா (Tk), 50 தகா, மற்றும் 20 தகா நோட்டுகளில் இந்து, பௌத்தக் கோயில்கள், வரலாற்று அரண்மனைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது வங்காளத்தில் நிலவிய பஞ்சத்தை சித்தரிக்கும் வகையில் மறைந்த ஓவியர் ஜைனுல் அபேதினின் ஓவியங்களும் புதிய நாணயத்தாள்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் இறந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய தியாகிகளின் நினைவுச்சின்னம் மற்ற நாணயத்தாள்களில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுகள் ஜூன் 1, 2025 முதல் மத்திய வங்கியின் தலைமையகம் மற்றும் பிற அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன. அதே சமயம், முஜிபுர் ரகுமானின் உருவம் இடம்பெற்றுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளும், நாணயங்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று வங்காளதேச வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2020-ல் முஜிபுர் ரஹ்மானின் சிலை சேதப்படுத்தப்பட்டது முதலே வங்காளத்தேசத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுகிறது. 2023 இல் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியின் விளைவால் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

முகமது யூனுஸ் தலைமையிலான அரசாங்கம் அமைந்தது முதலே, தொடர்ச்சியாக முஜிபுர் ரஹ்மான் வரலாற்றை சிதைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஒருதரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பள்ளி,கல்லூரி பாடப்புத்தகங்களில் முஜிபுர் ரஹ்மான் குறித்து பல்வேறு தகவல்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன, அவரது வரலாற்று போரட்டங்கள் தொடர்பாக சில விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக தான், நாணயத்தாள்களில் அவரது உருவத்தை நீக்கியுள்ளதும் கருதப்படுகிறது.