தமிழ்நாடு

போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Youth death under police custody
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயிலில் பெண் பக்தரின் தங்க நகை திருடப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் ஊழியர் அஜித் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் திருப்புவனம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அஜித்குமார் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், அவரது உடலில் 18 வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும் கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மண்டையோடு, கை, முதுகு, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக் கசியல் போன்ற மரணிக்க காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தொண்டை பகுதியில், ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் சொல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசியல் போன்றவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனைக்கு 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித் குமார் மீது நடந்த பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.