தமிழ்நாடு

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முருக பக்தரான வி. பாண்டியராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், வடபழனி முருகன் கோவிலில், வள்ளி திருமண மண்டபம் அருகே புதிய திருமண மண்டபமும், தெய்வானை திருமண மண்டபம் அருகே பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பும் கட்ட இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுமானங்கள் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள கோவில் பகுதியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று மனுதாரர் கவலை தெரிவித்துள்ளார். கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் சுமார் 300 நான்கு சக்கர வாகனங்களையும், 500 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும் என்றும், இந்தக் கட்டுமானங்கள் அமலுக்கு வந்தால், அப்பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்படும் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக வீணடிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருளமுருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் புகார் மீது ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ளதால், இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்க அவசியம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இருப்பினும், மனுதாரரின் புகாரை வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர் முறையாக விசாரித்து, மூன்று வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், தேவைப்பட்டால் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.