தமிழ்நாடு

நெல்லை அருகே மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய இளம்சிறார்கள் கைது!

நெல்லை அருகே முன் வீரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேரை இளம்சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு.. தப்பியோடிய இளம்சிறார்கள் கைது!
A sickle attack on three people near Nellai... The juveniles who fled have been arrested
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சேரன்மகாதேவி பகுதியில், முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை இளம்சிறார்கள் அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, மூன்று இளம்சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்விரோதம் காரணம்

அம்பாசமுத்திரம் அடுத்த சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மூன்று இளம்சிறார்கள், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுடன் பைக்கில் வேகமாகச் சென்றது தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாகவே நேற்று இரவு இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்குதலும், தப்பியோட்டமும்

இந்த நிலையில், நேற்று (செப்.1) இரவு சம்பந்தப்பட்ட சிறுவனைத் தேடி அவனது வீட்டிற்கு அந்த மூவரும் சென்றுள்ளனர். அப்போது சிறுவன் இல்லாத நிலையில், அவனது தம்பியிடம் விசாரணை செய்துள்ளனர். திடீரென அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தச் சிறுவனின் தம்பியைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுவன் தப்பியோடிய நிலையில், அவனது கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட சாலையில் சென்ற ஆறுமுகம் (58) மற்றும் சரவணன் (60) ஆகியோர் தட்டிக்கேட்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்சிறார்கள், இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும், சரவணனின் 16 வயது மகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி காவல்துறையினர், ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் விரைந்து சென்று, தப்பியோடிய மூன்று இளம்சிறார் குற்றவாளிகளையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சிறார்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.