தமிழ்நாடு

'மா' சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு.. வரும் 20-ம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு!

'மா'சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

'மா' சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு.. வரும் 20-ம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு!
'மா' சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு.. வரும் 20-ம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு!
வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், வேலூர் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை கட்டிக் தரவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் குடியாத்தம் – சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மா சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்க அரசு முன் வரவில்லை என குற்றம் சாட்டியுள்ள அதிமுக, வரும் வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே திமுக அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என விமர்சனம் செய்துள்ள அவர், தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க தமிழக அரசை இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில், தொழிலாளர்கள், பொது மக்கள் என பலர் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.