தமிழ்நாடு

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
அரசின் திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் இடம்பெற்றதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்ககவும், முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் விசாரணைக்கு வந்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனத் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்று கூறியுள்ளனர்.

மேலும், தமிழக அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.

அதேசமயம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரைத் தேர்தல் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனத் தெளிவுபடுத்தி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தார்.