தமிழ்நாடு

மதுரை ஆதீனத்தின் கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது – பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 மதுரை ஆதீனத்தின் கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது – பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
வெளியேற்ற வேண்டும்

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தமிழகம் வந்து தமிழகத்திலிருந்து இலங்கை சென்று இருப்பதாக செய்திகள் வந்திருந்தன.

எனக்கு அதில் ஒரு சந்தேகம் ஏன் அவர்கள் தமிழகத்திலேயே தங்கி இருக்கக்கூடாது. எனவே தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தீவிரவாதிகளை கண்காணிக்க வேண்டும்.
பங்களாதேஷத்தில் இருந்து பல்வேறு நபர்கள் இங்கே தங்கி உள்ளார்கள். அவர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை வெளியேற்ற வேண்டும்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது காஷ்மீருக்கு 370வது சிறப்பு அந்தஸ்து வழங்கி செயல்பட்டு வந்த நிலையில், அங்கே தீவிரவாதம் தலை தூக்குவதை கண்டு 370வது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் பகுதி முழுமையான வளர்ச்சி அடைய வேண்டுமென்பதற்காக பாரத பிரதமர் வேலை வாய்ப்புகள் தொழில் வளர்ச்சிகள் ஏற்படுத்த பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், மதுரை ஆதீனம் கார் விபத்து குறித்த கேள்விக்கு, மதுரை 293வது ஆதீனம் கார் விபத்து சம்பவத்தில் இருந்தவர், அறிந்தவர், தெரிந்தவர் அவர் சொல்லக்கூடிய விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.அதில் அதிகம் கவனம் கொடுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.