தமிழ்நாடு

ஆட்டோ வேணும் சார்.. 3 மாதத்தில் கோரிக்கையினை நிறைவேற்றிய ஆளுநர்!

மகளிர் தின நிகழ்வின் போது ஆட்டோ வழங்குமாறு பெண் ஒருவர் வைத்த கோரிக்கையினை 3 மாதத்தில் நிறைவேறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆட்டோ வேணும் சார்.. 3 மாதத்தில் கோரிக்கையினை நிறைவேற்றிய ஆளுநர்!
Governor Ravi Gifts New Autorickshaw to Inspiring Woman Driver
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின் போது, வாடகை ஆட்டோ ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அமலா, ஆளுநரால் கௌரவிக்கப்பட்டார். அப்போது நிகழ்வில் பேசிய அமலா, ’எனக்கு சொந்தமாக ஆட்டோ வழங்கினால் நான் இன்னும் சிறப்பாக செயல்பட உந்துக்கோலாக இருக்கும்’ என ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றினை வைத்தார்.

இந்நிலையில், இன்றையத் தினம் சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் கோரிக்கை வைத்த அமலாவிற்கு ஆட்டோவினை வழங்கி சிறப்பித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கடுமையான உழைப்பால் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் அமலா, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவார் எனவும் ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.



ஆட்டோவினை பெற்ற அமலா கூறுகையில் ”நான் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறேன். மகளிர் தினத்தன்று சொந்தமாக ஆட்டோ வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்து 3 மாதம் ஆயிடுச்சு. நானும் அதன் பிறகு கோரிக்கை தொடர்பாக யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நானே ஒருக்கட்டத்தில் கோரிக்கையினை மறந்துவிட்டேன். கனவுல கூட நினைச்சு பார்க்கல, நான் ஆட்டோ வாங்குவேன் என. எப்படி நன்றி சொல்றதுனு தெரியல. வண்டு ஓடுதோ? இல்லையோ? நான் வாடகை கொடுத்தே ஆகணும். அதுக்காகவே இராத்திரி 12 மணி வரைக்கும் கூட பெண் பிள்ளைகளே வீட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டியிருக்கேன். என்னடா நம்ம தலையெழுத்து இப்படி இருக்கேனு நினைச்சிட்டு இருந்தேன். முயற்சி பண்ணுங்க கடவுள் யாரையாவது நம்ம கஷ்டத்தை போக்க அனுப்புவாங்க. அப்படிதான் ஆளுநரை எனக்காக அனுப்பியிருக்காங்க” என தெரிவித்தார்.