தமிழ்நாடு

ஒரே நாளில் இருமுறை தங்க விலை உயர்வு.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் இருமுறை தங்க விலை உயர்வு.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!
Gold Price Increase
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 9 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.21,000 அதிகரித்து, இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.10,430-க்கும், சவரன் ரூ.83,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும் விற்பனையானது.

இரண்டாவது முறையாக விலை உயர்வு

இன்று மாலை நிலவரப்படி, தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.149-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,49,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகளாவிய சந்தை போக்குகள் ஆகியவை இந்த தொடர் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.