தமிழ்நாடு

காசோலை மோசடி வழக்கு: திமுக கூட்டணி எம்எல்ஏ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கு: திமுக கூட்டணி எம்எல்ஏ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை!
Prison For MDMK MLA
காசோலை மோசடி வழக்கில், மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமாருக்குச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் சதன் திருமலை குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காகச் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி கடன் பெற்றார். இந்தக் கடனுக்காக அவர் ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு காசோலைகளை வழங்கியிருந்தார். ஆனால், வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலைகள், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று கூறி திரும்பிவிட்டன.

இதனையடுத்து, நிதி நிறுவனத்தின் இயக்குநர் 2019 ஆம் ஆண்டு சதன் திருமலை குமாருக்கு எதிராகச் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு பின்னர் சிறப்பு நீதிமன்றம் வழியாகச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நீதிமன்றம் விதித்த தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், காசோலை மோசடி வழக்கில் சதன் திருமலை குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தார். இதன் அடிப்படையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், ஒரு கோடி ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்குள் அவர் நிதி நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்வதற்காக இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.