தமிழ்நாடு

இறுதிச் சடங்கில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு ஏன் பாரபட்சம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு

விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு ஏன் பாரபட்சம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு
chennai high court orders Prison authorities may allow undertrial prisoners to attend the funerals
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை, அவர்களது நெருங்கிய உறவுகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிடும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்துல்லா என்பவரின் தாயார் மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க கோரி பரக்கத்துல்லாவின் சகோதரி சரிக்காது நிஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதனால் விசாரணை கைதிகளின், தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகள் மரணம் அடைந்தால், இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரக்கத்துல்லாவுக்கு, இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை அனுமதி அளித்த நீதிபதிகள், இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவர், அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Read more: சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குழாய் மூலம் எரிவாயு வழங்க அனுமதி