அரசியல்

உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிசாமி
wishes to the real fathers - Edappadi Palaniswami
உலகம் முழுவதும் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டின் தந்தையர் தினம் இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது. இந்த தினம், தந்தையர் வழங்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைக் கௌரவிக்கிறது.

இதனையொட்டி, பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை 'அப்பா, அப்பா' என வாய்நிறைய அழைக்கும்போது அளிவில்லை மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "குழந்தைகள் தன்னை அப்பா அப்பா என்று அழைப்பதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகளின் கதறல் கேட்கவில்லையா?" என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.