அரசியல்

திருக்குறள் சனாதனத்திற்கு நேரெதிரானது.. ஆளுநருக்கு திருமாவளவன் பதிலடி

புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருக்குறள் சனாதனத்திற்கு நேரெதிரானது.. ஆளுநருக்கு திருமாவளவன் பதிலடி
Governer Ravi and Thirumavalavan
பெரம்பலூர் அடுத்த துறைமங்கலம் பகுதியில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி அருண் என்பவரின் இல்ல நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமவளவனிடம், "புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது" என ஆளுநர் ரவியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "உலக மக்கள் அனைவரும் ஒரே குலம் என்றுரைத்த திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது. தமிழ்நாடு ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இதனை சனாதனத்தோடும் புதியகல்விக்கொள்கையோடும் ஒப்பிடுகிறார். அதோடு தமிழ், திருவள்ளுவர்,பாரதி என அனைத்தையும் சனாதனத்தோடு இணைத்து பேசி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க முயற்சிக்கிறார். இந்த மாய அரசியலெல்லாம் தமிழ்நாடு மக்களை மயங்க செய்யாது" என்றார்.

திருவள்ளூவரின் பக்தர் மோடி என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்திற்கு பதிலளித்த அவர், "ஒடிசாவில் நவின் பட்னாயக்கை எதிர்த்து தமிழரை வெற்றியடைய செய்யலாமா என விமர்சித்த அமித்ஷா இன்று திருவள்ளுவரின் பக்தர் மோடி என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புதமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதே முக்கியம். தொடர்ந்து ஜனநாயக சக்திகளை சிதரவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. இதில் தனிப்பட்ட லாபம் பெரும் எண்ணம் இல்லை" என்றார்.

"தொடர்ந்து திமுகவினரை குறிவைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் பாஜகவினரது கருத்திற்கு ஆதாரம் இருந்தால், அதிகாரம் கொண்டுள்ள அவர்கள் அம்பலப்படுத்தலாம். ஆனால் அது அரசியல் மிரட்டலுக்காக வைக்கு குற்றச்சாட்டு" என தெரிவித்தார்.

மேலும், "பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவின் நிலை? என்ற கேள்விக்கு "யூகமான கேள்விக்கு பதில் கூற இயலாது. வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.