அரசியல்

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!
O. Panneer Selvam and Sengottaiyan
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னைக்குச் செல்வதற்காக தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் சந்திப்புக்கு காரில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்தார்.

சசிகலா, தினகரன் சந்திப்பு

சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, “சந்திப்பேன், உரிய நேரத்தில்” என்று ஓ.பி.எஸ். பதிலளித்தார். அதேபோல், டிடிவி தினகரனை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, “விரைவில் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சந்திப்பேன்” என்றார்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியை மாற்றினால், டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவதாகக் கூறினாரே என்ற கேள்விக்கு, “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்து, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைக் கூறாமல் தவிர்த்தார்.

நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு

நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, “முன்னரே சொல்லிவிட்டேன்; எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” என ஓ.பி.எஸ். பதிலளித்தார். மேலும், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தொலைபேசி தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, “இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசினார். சந்திக்க வேண்டும் என்று சொன்னார். உறுதியாக நாம் சந்திப்போம்” என்று சொல்லி இருக்கிறேன் என்றார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளாரே, தாங்கள் டெல்லி செல்ல உத்தேசம் உள்ளதா என்ற கேள்விக்கு, “தற்போதைக்கு இல்லை” என்று பதிலளித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் 10 நாள் கெடு முடிவடைந்த நிலையில், என்ன பதில் சொல்வார் என்ற கேள்விக்கு, “அண்ணன் செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்” என்று கூறினார்.