அரசியல்

தொடர் மழை: வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம்- விஜய் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தொடர் மழை: வடிகால் வசதிகள் முடிக்கப்படாததால் மக்கள் துயரம்- விஜய் குற்றச்சாட்டு!
TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் சந்திக்கும் துயரத்திற்கு முறையாகச் செய்து முடிக்கப்படாத வடிகால் வசதிகளே காரணம் என்று தமிழக அரசை விமர்சித்துள்ளார். மேலும், இந்தச் சிரமங்களைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'வடிகால் வசதிகள் இல்லாததே காரணம்'

தவெக தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.