அரசியல்

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
R.B.Udhayakumar and T.R.B.Rajaa
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் இன்று புகார் அளித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "கீழடி அகழ்வாராய்ச்சிக்காக முதன்முதலாக ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்து, அகழாய்வை மேற்கொண்டது அதிமுக அரசு. அதில் கிடைக்கப்பட்ட அறிய தமிழர் பாரம்பரிய பண்பாட்டை உலகறியச் செய்ய 12.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் எடப்பாடி பழனிசாமி தான்.

நமது தமிழர் பண்பாட்டை யாராலும் மறைக்க முடியாது. அகழ்வாராய்ச்சி தொண்மையையும், நமது நாகரீகத்தையும், கல் தோன்றி முன் தோன்றா மூத்த குடி தமிழ்குடி. ஆகவே மொழியிலும் சரி இனத்திலும் சரி நாம் முன்னோர்கள் மூத்தவர்கள். பண்பாட்டையும், நாகரீகத்தையும் உலகத்திற்கு கற்றுத் தந்த இனம் தமிழ் இனம் அதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை நாம் சமர்பித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் கேட்பதற்கு நிச்சயமாக ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அதை கொடுப்போம் அதை ஏற்றுக் கொள்ள கூடிய காலம் இருக்கிறது.

அகழ்வாராய்ச்சியின் ஆதாரங்களை மறுத்தால் அதனை எதிர்க்கும் முதல் உரிமை குரலை அதிமுக எழுப்பும். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நாடகம் ஆடுவது, இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு கை வந்த கலை. திமுகவின் இயலாமையை மறைப்பதற்கு அகழாய்வை உலகத்திற்கு வெளிப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு பரப்புவதை வண்மையாக கண்டிக்கிறோம்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா, எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட்டது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் தமிழ்நாட்டில் அவர் நடமாட முடியாது. அந்த அளவிற்கு அதிமுக தொண்டர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். அவர்கள் எந்த விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என எங்களால் உறுதியாக சொல்ல முடியாது.

ஏனென்றால் அந்த அளவிற்கு நாங்கள் நேசிக்கும் தலைவரை அவதூறு செய்வது கண்டனத்திற்குரியது. அவர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தான் எங்கள் புகார் மனுவின் சாராம்சம். எல்லா பகுதிகளிலும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று புகார் அளித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.