அரசியல்

கரூர் சம்பவம்: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்? ஓட்டுனரிடம் கிடுக்குபிடி விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் சம்பவம்: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்? ஓட்டுனரிடம் கிடுக்குபிடி விசாரணை!
Karur Stampede
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றிமலையில் இருக்கும் சுற்றுலா மாளிகையில் தங்கி, சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

பிரசார வாகனம் ஆய்வு; ஓட்டுநரிடம் விசாரணை

மூன்று மாதங்களுக்கும் மேலாகப் பொது மக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எனப் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பிரசார கூட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விஜய்யின் பிரசார வாகனம் சி.பி.ஐ. அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தற்போது சி.பி.ஐ. அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி உள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம், பிரசாரம் மேற்கொண்ட நேரம், எந்த இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது, எப்போது பிரசாரத்தைத் தொடங்கினார், எப்போது முடித்தார், அவர் எப்போது கிளம்பிச் சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் 12 ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.