அரசியல்

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு

"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு
MLA Rajan Chellappa speech in aiadmk booth agents meeting
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம், மேலூர் முன்னாள் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இதில், மதுரை கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், அம்மா பேரவை செயலாளருமான தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ராஜன் செல்லப்பா: "அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மகளிர் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், அம்மா உணவகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிப் போட்டுள்ளது. திமுக அரசு கொண்டுவந்துள்ள 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் முறையாக மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

திமுக ஆட்சி திறமையற்ற, வக்கற்ற ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு எதுவும் செய்யாமல், வெறும் 'போட்டோ ஷூட்டிங்' நடத்தும் ஆட்சியாக உள்ளது. மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். இதில் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தோம் என திமுகவினர் சொல்ல முடியுமா? திமுகவினர் கட்சி வளர்ப்பதில் தான் கவனம் செலுத்தினர். ஆட்சிக்கு வந்த 3-வது வருடத்திலேயே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டனர்.

வரும் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவினரின் ஆசை கனவிலும் நிறைவேறாது. திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை. அதிமுக மட்டுமேதான் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் வந்துள்ளது" என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பகுதி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு அறுசுவை அசைவ விருந்தும் வழங்கப்பட்டது.