அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
Complaint against Edappadi Palaniswami
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி கட்டிடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புகாரின் பின்னணியும் முந்தைய வழக்கும்

2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த என். ராஜசேகரன் என்பவர் 2021 ஜூலையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இந்த நிலையில், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட தகவலை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் முந்தைய வழக்கை முடித்து வைத்திருந்தது.

சிபிஐ விசாரணை கோரி புதிய மனு

புகார் அளித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தனது புகார் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளதாகக் கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்," என்று ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி திரும்பப் பெறப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிக்கை

மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதிப் பங்களிப்புடன் இந்தக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கான பொதுவான அனுமதியைத் திரும்பப் பெற்றுத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை, நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளது என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியைத் திரும்பப் பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.