அரசியல்

கர்ஜனை மொழி கனிமொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை என செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் புகழாரம்

கர்ஜனை மொழி கனிமொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழிக்கு தந்தை பெரியார் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கரூர் மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று ( செப்.17) மிக பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், “இது கரூர் அல்ல திமுகவூர். உயிரோடு கலந்திருக்கும் கலைஞர் கருணாநிதியை பிரதிபலிக்கும் தொண்டர்கள் இங்கு கூடியுள்ளனர்.

செயல் வீரர் செந்தில் பாலாஜி

கொட்டும் மழையில்தான் திமுகவை தொடங்கி வைத்தார் பேரறிஞர் அண்ணா. தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முப்பெரும் விழாவுக்காக தொண்டர்கள் இங்கு நிற்கின்றனர்.

கரூரில் முப்பெரும் விழா நடத்த வேண்டும் என செந்தில் பாலாஜி அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுத்தேன். முப்பெரும் விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார் செயல் வீரர் செந்தில் பாலாஜி. திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை.

கர்ஜனை மொழி கனிமொழி

பொதுக்கூட்டம் எனக் கூறி மாபெரும் எழுச்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜியை முடக்கப்பார்த்தனர்.ஆனால், அவர் செய்ய வேண்டியவற்றை சிறப்பாக செய்து முடிப்பார்.

கனிமொழி பார்ப்பதற்குதான் கனிமொழி. நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி. நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசை உருவாக்கி என்னை முதலமைச்சராக்கியுள்ளீர்கள். கடந்துவந்த பாதையின் மேடு பள்ளங்களை பரிசீலித்து எதிர்கால பாதையை வெற்றிப்பாதையாக்க ஒன்றுகூடியுள்ளோம்” எனப் பேசினார்.
முன்னதாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழிக்கு தந்தை பெரியார் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.