அரசியல்

"சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி அரசியல் செய்கிறார்"- கண்ணீர் சிந்திய ராமதாஸ்!

சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.


Ramadoss and Anbumani
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியபோது, தனது மகன் அன்புமணி தன்னைக் குறிவைத்துச் செய்யும் செயல்பாடுகளால் கண்ணீர் சிந்தியபடி வேதனை தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் கைக்கூலி அன்புமணி: ஸ்ரீகாந்தி

பாமக பொதுக்குழு சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஸ்ரீகாந்தி, "பாமகவை வளர்த்தெடுத்த ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரித்துவிட்டு யாருக்காக நீங்கள் (அன்புமணி) போராடப் போகிறீர்கள்? ராமதாஸை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

மருத்துவர் பட்டமும் எம்பி, அமைச்சர் பதவிகளும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை. அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். தலைவரை கண்டுகொள்ளாமல் பாமகவுக்கு இனி நான்தான் தலைவர் என்று கூறினால் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமெனால் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

திமுக கைக்கூலி என்று எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்.

பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார். ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். இனிமேல் குறுக்கே பேச யாரும் இல்லை, காலை வாரிவிடவும் யாரும் இல்லை" என்று பேசினார்.

கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது, "இன்றைய கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். 2025 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கிறோம், 2026 வரவேற்கிறோம். இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படுமா? என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கூட்டணி குறித்து கேட்பவர்களிடம் 'ராமதாஸ் நல்ல முடிவு எடுப்பார், அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்' என்று கூறுங்கள்.

கூட்டணி குறித்து கருத்து கேட்டிருக்கிறேன். இன்னும் காலம் கனியவில்லை. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். நான் வளர்த்த பிள்ளைகள், நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் என்னை மிகவும் மோசமாகத் தூற்றுகிறார்கள்.

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை. அப்படி சரியாக வளர்த்திருந்தால் என்னை மார்பில், முதுகில் குத்தியிருக்கமாட்டார். அவருக்கு ஒரு குறையும் நான் வைக்கவில்லை. மற்ற தகப்பனைவிட அதிகமாக அவருக்குச் செய்திருக்கிறேன்.

'சில்லறை பையன்களை' வைத்துக்கொண்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள். 30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த ஜி.கே. மணியை அன்புமணி அவமானப்படுத்தினார். தொடர்ந்து என்னையும் நேரடியாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அன்புமணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என என்னுடைய மருத்துவர்களே கேட்கின்றனர். 100க்கு 95% மக்கள் என்னுடன்தான் இருக்கின்றனர். அன்புமணியிடம் 5% மக்கள்கூட இல்லை.

இந்த தேர்தல் அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும். தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியைத் தரும். இந்த மக்கள் என்னை எப்போதும் கைவிட்டதில்லை. இனிமேலும் கைவிட மாட்டார்கள். இதுபோன்று ஒரு தகப்பன் உலகில் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார். எனக்கு இதற்கு மேல் பேச முடியவில்லை. அவரது செயல்பாடுகள் அப்படி இருந்தன.

எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். இந்த கூட்டம் நடைபெறும் திருமண மண்டபம் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் நடைபெற்றன. அதையெல்லாம் தாண்டி சிறப்பாக இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது" என்று கண்ணீரை துடைத்தபடியே ராமதாசு பேசி முடித்தார்.