இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் தீபாவளி: கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாட்டம்!

பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் தீபாவளி: கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாட்டம்!
PM Modi
பிரதமர் மோடி தனது வழக்கமான வருடாந்திர மரபைப் பின்பற்றி, இந்திய ஆயுதப்படை வீரர்களுடன் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடினார். கோவா கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலில் கடற்படை வீரர்களுடன் அவர் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.

பிரதமர் மோடி உரை

இதையடுத்து, நூற்றுக்கணக்கான வீரர்களிடையே பேசிய பிரதமர் மோடி, "இந்தப் புனிதமான பண்டிகையை உங்களோடு கொண்டாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையில், "இன்று ஒரு அற்புதமான நாள். இந்தக் காட்சி மறக்க முடியாதது. இன்று ஒருபுறம் பெருங்கடலும், மறுபுறம் பாரதத் தாயின் துணிச்சல் மிகுந்த வீரர்களின் பலமும் என்னுடன் இருக்கின்றன," என்று கூறினார்.

"ஒருபுறம் எல்லையற்ற வானமும் கடலும் இருக்கின்றன, மறுபுறம் எல்லையற்ற சக்தியை உள்ளடக்கிய இந்த ராட்சத கப்பல், ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளது. கடலின் நீரில் சூரியக் கதிர்கள் பளபளப்பது, நம் வீரர்களால் ஏற்றப்பட்ட தீபாவளி விளக்குகளைப் போல உள்ளது," என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

'ஆபரேஷன் சிந்துர்' குறித்துப் பெருமிதம்

இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியப் படைகளின் திறமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

"ஆபரேஷன் சிந்துர் (Operation Sindoor) நடவடிக்கையின் போது, இந்தக் கப்பல் பாகிஸ்தானை ஒரு சில நாட்களிலேயே மண்டியிட வைத்தது," என்றும் அவர் குறிப்பிட்டார். ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு போர்க் கப்பல் மட்டுமல்ல, "21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, வலிமை மற்றும் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்" என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.