இந்தியா

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்
Major change in AC usage
இந்தியாவில் ஏசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் காரில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

இந்த நிலையில், ஏசி வெப்பநிலை அளவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலையைச் சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்க முடியும்.

ஆனால், வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம், நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும். இது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், சோதனை அடிப்படையில் இந்த விதிமுறை கொண்டுவர உள்ளோம். இது விரைவில் அமல்படுத்தப்படும் " எனக் கூறினார்.

புதிய கட்டுப்பாட்டின் நோக்கம்..

ஏசி பயன்பாட்டில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் இந்த புதிய கட்டுப்பாட்டின் நோக்கம் என்னவென்றால், கோடை காலங்களில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கும்போது, அதன் பயன்பாட்டை குறைப்பதாகும். இதுகுறித்து மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் உயர் அதிகாரியான பங்கஜ் அகர்வால் கூறுகையில், "குளிர்சாதனங்கள் சுமார் 50 ஜிகாவாட் மின்சார பயன்பாட்டைக் கொண்டுள்ளன. இது நாட்டின் அதிகபட்ச மின் சுமையில் ஐந்தில் ஒரு பங்கு.

ஏசி வெப்பநிலையில் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது மூலம், மின்சார பயன்பாட்டை 6 சதவீதம் வரை குறைக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது, ஒவ்வொருவரும் தங்கள் ஏசிகளை 1 டிகிரிக்கு மேல் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம், சுமார் 3 ஜிகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்" என்று அவர் கூறினார்.