இந்தியா

விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

புதுச்சேரியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!
A man with a gun
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று (டிசம்பர் 9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் சந்திப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், க்யூஆர் குறியீடுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அனுமதி அட்டை (பாஸ்) உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கியுடன் வந்த நபர்

இந்த நிலையில், இன்று காலை பிரதான நுழைவு வாயிலைக் கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் உள்ளே வரும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டபோது, அவரது இடுப்புப் பகுதியில் இருந்து சப்தம் கேட்டுள்ளது. அவரைச் சோதனையிட்ட போலீசார், அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரைத் தனிமைப்படுத்திய காவல் துறை அதிகாரிகள், கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான தகவல்

கைத்துப்பாக்கிக்கான உரிமம் உள்ளிட்டவை குறித்தும், பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள் என்பது குறித்தும் மூத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் விசாரணை நடத்தினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய ரிசர்வ் படையில் (CRPF) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இவர், சிவகங்கை மாவட்டக் கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராகப் பணியில் உள்ளார்.

டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், டாக்டர் பிரபு புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்தததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.