சினிமா

'பேட்மேன்' அருணாச்சலம் - பா. விஜய் கூட்டணியில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பாடல்!

பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், மாதவிடாய் விழிப்புணர்வுப் பாடல் உருவாக்க கவிஞர் பா.விஜய்யுடன் இணைந்துள்ளார். பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, இப்பாடல் உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.

'பேட்மேன்' அருணாச்சலம் - பா. விஜய் கூட்டணியில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பாடல்!
Awareness song on menstrual hygiene
சானிடரி பேடுகளை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை கணிசமாக அதிகரித்து மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதை பெற்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.

மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தும் சுகாதாரமற்ற முறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த இவரது வாழ்க்கை கதை, பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் 'பேட்மேன்' என்ற படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மாதவிடாய் குறித்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, முழுமையான மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்வை உருவாக்க பாடல் ஒன்றை உருவாக்குவதற்காக பிரபல கவிஞர் பா. விஜய்யுடன் அருணாச்சலம் முருகானந்தம் இணைந்துள்ளார்.

பெண்கள் சமத்துவ நாளில் அறிவிப்பு

இந்த பாடல் குறித்த அறிவிப்பு பெண்கள் சமத்துவ நாளான ஆகஸ்ட் 26 (நேற்று )வெளியிடப்பட்டது. இது குறித்து பேசிய அருணாச்சலம் முருகானந்தம், "மாதவிடாய் மற்றும் கருப்பை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப் பெரிய அளவில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று ஒரு தொய்வை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் முழுமூச்சாக இதில் நாங்கள் இறங்கி உள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் இந்த பாடலை உருவாக்க உள்ளோம்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பாடலை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும். பெண்களின் சுகாதாரத்தை பாதுகாக்க பெண்கள் சமத்துவ நாளான இன்று உறுதி ஏற்கிறோம்," என்று கூறினார்.

தயாரிப்புக் குழு

துபாயை தலைமையிடமாக கொண்ட இந்திய தொழிலதிபரும் முதலீட்டாளருமான தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இதை தயாரிக்கிறார். அவர் பேசுகையில், "இந்த படைப்பை நாங்கள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் அர்பணிக்கிறோம்," என்றார். இந்த பாடலின் முதன்மை ஆலோசகராக அவினாசி ஜோதி லிங்கம் பணிபுரியும் நிலையில், பா. விஜய் தமிழ் வரிகளை எழுதவுள்ளார்.