சினிமா

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?

நடிகர் சூர்யா 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?
Suriya and Jithu madhavan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு 'வாத்தி' மற்றும் 'லக்கி பாஸ்கர்' பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யாவின் 'ரெட்ரோ'...

சூர்யாவின் 'கங்குவா' படம் தோல்வியை தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், மற்ற திரைப்படங்கள் திரையரங்க வசூலை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில், 'ரெட்ரோ' படம் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என இரண்டையும் சேர்ந்து ரூ.234 கோடி வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டது. இதனை வைத்து நெட்டிசன்கள் படக்குழுவை விமர்சித்து வந்தனர்.



மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..

சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவர் பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா - ஜித்து மாதவன் கூட்டணி அமைந்தால், அது சூர்யாவின் கேரியரில் சிறந்த படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.