“YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை..” லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் பதிலடி!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Sep 20, 2024 - 16:28
 0
“YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை..” லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் பதிலடி!
ஜெகன்மோகன் விளக்கம்

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதுகுறித்து ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் கொடுத்துள்ளார். திருப்பதி கோயிலில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளில் கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து நெய்யின் மாதிரியை ஆய்வு செய்ததில் மீன், பன்றி, மாட்டுக் கொழுப்பு எண்ணெய் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 3 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், கோடிக்கணக்கான பக்தர்களை இந்த அறிவிப்பு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் விளக்கம் தேவை, விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியது. மேலும், திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக CBI விசாரணை தேவை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து லட்டு விவகாரம் குறித்து இன்று மாலைக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நெய்யில் பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு இருந்ததாகவும் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி பேட்டி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, வெள்ள சர்ச்சையை திசை திருப்பவே, திருப்பதி லட்டு பிரச்னையை சந்திரபாபு நாயுடு அரசு கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடவுளின் பெயரில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை வாங்க 6 மாதத்திற்கு ஒரு முறை ஆன்லைன் டெண்டர் விடப்படும். இந்த டெண்டர் முறையை மாற்றாமல் அதனையே YRS காங்கிரஸ் பின்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் YRS காங்கிரஸ் ஆட்சியில் நெய் தரமற்றது என 18 முறை திருப்பி அனுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது. இதனால் திசைதிருப்பல் நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. தர்மத்திற்கு எதிரான செயல்கள் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அதிகரித்துள்ளதாகவும், YRS காங்கிரஸ் கொண்டு வந்த நலத்திட்டங்களை அவர் முடக்கிவிட்டதாகவும் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். அதேபோல், YRS காங். மீது பொய் வழக்குப் போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலையாக உள்ளது. சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன். அவரது ஆட்சியின் தவறுகளை மடைமாற்றம் செய்யவே லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

கடவுளை கூட அரசியலுக்குள் இழுத்து வந்து கீழ்த்தரமான வேலை செய்கிறார் சந்திரபாபு நாயுடு. முதலமைச்சர் பக்தர்களின் மனநிலையை வைத்து அரசியல் செய்வது நியாயமானதல்ல எனவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். மேலும், சந்திரபாபு நாயுடு கூறுபவை அனைத்தும் மக்களை திசை திருப்பும் கட்டுக்கதை. நெய் கொண்டுவர பயன்படுத்தப்படும் ஒவ்வொரு லாரியும் NABN சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம் கொடுத்துள்ளார். திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியல் வட்டாரம் மட்டுமின்றி பக்தர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow